கடலூர்: ஏ.சி. எந்திரம், குடைக்குள் சுருண்டு இருந்த நல்ல பாம்புகள்

ஏ.சி. எந்திரத்துக்குள் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பு பதுங்கி இருந்தது.
கடலூர்: ஏ.சி. எந்திரம், குடைக்குள் சுருண்டு இருந்த நல்ல பாம்புகள்
Published on

கடலூர்,

கடலூர் முதுநகர் அருகே சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். நிறுவனத்தின் கீழ்தளத்தில் இருந்த ஏ.சி. எந்திரங்களை ஊழியர்கள் இயக்கியபோது ஒரு ஏ.சி. எந்திரத்தில் இருந்து உஷ்... உஷ்... என்று சத்தம் கேட்டது.

இதனால் சந்தேகமடைந்து உஷாரான ஊழியர்கள், அந்த ஏ.சி. எந்திரத்தின் அருகில் சென்று உற்றுப்பார்த்தனர். அதில் ஒரு பாம்பு சுருண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாம்பு பிடி வீரர் செல்லா விரைந்து சென்று, ஏ.சி. எந்திரத்தில் சுருண்டு பதுங்கி இருந்த 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தார்.

இதேபோல் கடலூர் அருகே உள்ள கீழ்அழிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பால் வியாபாரி ஒருவரது வீட்டில் மடக்கி வைத்திருந்த குடைக்குள் நேற்று பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் 4 அடி நீள முள்ள நல்ல பாம்பை லாவகமாக மடக்கி பிடித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com