தண்ணீர் லாரி -பஸ்மோதல்;தொழிலாளி உடல் நசுங்கி பலி

தண்ணீர் லாரி மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் லாரியின் அடியில் சிக்கி கட்டிட தொழிலாளி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தண்ணீர் லாரி -பஸ்மோதல்;தொழிலாளி உடல் நசுங்கி பலி
Published on

குண்டடம்

குண்டடம் அருகே, தண்ணீர் லாரி மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் லாரியின் அடியில் சிக்கி கட்டிட தொழிலாளி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில்கூறப்படுவதாவது:-

லாரி-பஸ் மோதல்

திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்துள்ள மேட்டுக்கடையிலிருந்து தண்ணீர் லாரி தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால் கோவையிலிருந்து தாராபுரம் நோக்கி தனியார் பஸ் வந்தது.

ருத்ராவதி அருகே வாய்க்கால் பாலம் பிரிவில் லாரி வலதுபுறம் திரும்ப முயன்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக தண்ணீர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரி ரோட்டில் கவிழ்ந்தது.

தொழிலாளி பலி

இந்த விபத்தில் லாரியின் முன்புற சீட்டில் உட்கார்ந்து வந்த பொங்கலூரைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளி ரவி (வயது30) தண்ணீர் லாரியின் அடியில் சிக்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

லாரியை ஓட்டி வந்த குண்டடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்த நந்தகுமார் (29), அவர் அருகில் உட்கார்ந்து வந்த மேட்டுக்கடையை சேர்ந்த பிரபு (24) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்தான புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com