

சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை வடபழனியில் உள்ள மாநகர போக்குவரத்து கழக டெப்போவில் 28.7.2019 அன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பஸ் கட்டிட சுவர் மீது மோதியதில் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்தில் போக்குவரத்து கழக பணியாளர்களான சென்னையைச் சேர்ந்த கே.சேகர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ப.பாரதி ஆகியோர் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். 6 பேர் காயம் அடைந்தனர் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு சிறப்பு நிகழ்வாக தகுதியின் அடிப்படையில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.