

சென்னை,
பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது: பெட்ரோல் , டீசல் விலை உயர்வு என்பது ஒரு சங்கிலித் தொடர் போன்றது! இதனுடைய விலை உயரும் போது விலைவாசி உயர்கிறது. அதாவது உயர் வகுப்பினர், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் என அனைவரையும் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது.
இதனால் பேருந்து கட்டணம் கூடும். உணவுப்பொருட்கள் விலை கூடும். மளிகை பொருட்கள் விலை கூடும்.காய்கறிகள் விலை கூடும். எனவே தான் பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டி உள்ளது. பெட்ரோல் - டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டிருக்கிறது.அசாம் மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. அரசு வரியைக் குறைத்து, லிட்டருக்கு 5 ரூபாய் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருக்கிறது அந்தக் கட்சியுடன் கூட்டணியாக இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி தமிழகத்தில் பெட்ரோல் - டீசல் விலையைக் குறைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
இதே போல் பெட்ரோல் விலை முன்பு உயர்ந்த போது, 2018-இல் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வரியைக் குறைத்தார். அதன்மூலம் பெட்ரோல் - டீசல் விலையையும் குறைத்தார். தற்போது மேற்கு வங்க அரசும் வரியைக் குறைத்துள்ளது.ஆகவே திரு. பழனிசாமி அவர்களும் கொரோனா காலத்தில் அவரே உயர்த்திய வரியையாவது இப்போது குறைத்து, பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.