தமிழக பெண்களை மோசமாக பேசி வரும் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிஜிபி அலுவலகத்தில் விஜய் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி என்று டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் புகார் அளித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் தொண்டர்கள் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்த கருத்து சர்ச்சையானது. அவரது பேச்சுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்திருந்தார். தவெகவைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதித்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக பெண்களை மோசமாக பேசி வரும் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

ஆளும் தி.மு.க.வின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் பொன்ராஜ் என்கிற நபர் தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா, அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவே பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.

தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பொன்ராஜ் என்கிற இந்த நபர் ஆளும் கட்சியான தி.முக. தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைக் கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார்.

இவ்வாறு நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும், மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com