நடிகர் விஜய் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் ஐகோர்ட்டில் வணிகவரித்துறை பதில்மனு

சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வணிகவரித்துறை பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
நடிகர் விஜய் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் ஐகோர்ட்டில் வணிகவரித்துறை பதில்மனு
Published on

சென்னை,

நடிகர் விஜய் கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 5 சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழ்நாடு வணிகவரித்துறை உத்தரவிட்டது. அதை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, 2009-ம் ஆண்டு இந்த சொகுசு காரை தீபக் முரளி என்பவருக்கு விஜய் விற்பனை செய்துவிட்டார்.

இதற்கிடையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்களுக்கு நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்த பின்னர், வணிகவரித்துறை விஜய்க்கு 2019-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது.

அபராதம்

அதில், காருக்கு நுழைவு வரி ரூ.7 லட்சத்து 98 ஆயிரத்து 75, 2005-ம் ஆண்டு முதல் வரி செலுத்தாதற்காக ரூ.30 லட்சத்து 23 ஆயிரத்து 609 அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார்.

இதே கோரிக்கைகளுடன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தன.

அதிக தொகை

அப்போது ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் ஆஜரான வக்கீல், 2008-ம் ஆண்டு கார் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் வரி செலுத்தக்கோரி 2021-ம் ஆண்டுதான் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

விஜய் தரப்பு வக்கீல், கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்துக்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும். ஆனால் அதிக தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

அதிகாரம் உள்ளது

நடிகர் விஜய் தாக்கல் செய்துள்ள வழக்குக்கு வணிகவரித்துறை பதில்மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

நடிகர் விஜய் தொடர்ந்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இறக்குமதி காருக்கு நுழைவு வரியை செலுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு 2019-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்த பிறகு, குறித்த காலத்தில் நுழைவு வரி செலுத்தாததால், 2005-ம் ஆண்டு டிசம்பர் முதல், 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் நுழைவு வரியில் 2 சதவீதம் அபராத வட்டியாக ரூ.30 லட்சத்து 23 ஆயிரத்து 609 செலுத்தும்படி உத்தரவிடப்பட்டது. இவ்வாறு அபராதம் வசூலிக்க சட்டப்படி அரசுக்கு அதிகாரம் உள்ளது.

தீர்ப்பு தள்ளிவைப்பு

தற்போது அந்த சொகுசு காரை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்திருந்தாலும் அந்த அபராத வட்டியை விஜய்தான் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கு களின் தீர்ப்பை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com