தூத்துக்குடியில் அட்வான்ஸ்டு சி.என்.சி. பயிற்சி: கலெக்டர் சான்றிதழ் வழங்கல்

அட்வான்ஸ்டு சி.என்.சி. பயிற்சி பெற்ற பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உற்பத்தி செய்த இயந்திர பணிப்பொருட்களை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பார்வையிட்டார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தில் நேற்று (14.6.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் அட்வான்ஸ்டு சி.என்.சி. (Advanced CNC) பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் இளம்பகவத் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் மாணவர்களின் தனித் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு முதன்மை தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் தூத்துக்குடி கோரம்பள்ளத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் அட்வான்ஸ்டு சி.என்.சி. தொழிற்பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு அட்வான்ஸ்டு சி.என்.சி. இயந்திரத்தினை கையாளுவது இயந்திர பணிப்பொருட்களை தயாரிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அனுபவமுள்ள பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும் என்று முடிவு செய்து ஒரு தனியார் தொழில் நிறுவனத்தின் இயக்குநர்களாகிய வெங்கடேசன் மற்றும் சுவாமிநாதன் ஆகியோரால் 2.6.2025 முதல் 13.6.2025 வரை பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்கள் 5 பேர், அரசு பாலிடெக்னிக் கல்லூரி பயிற்றுநர்கள் 12 பேர், தூத்துக்குடி மற்றும் வேப்லோடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் அட்வான்ஸ்டு சி.என்.சி. தொழிற்பிரிவைச் சேர்ந்த 40 பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பயன்பெற்றுள்ளனர்.
மேலும் மாணவர்களாகிய நீங்கள் இதுபோன்ற உயர்தரமான பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுவதன் மூலம் தங்களது தொழில் திறன்களை வளர்த்து கொள்வதுடன் தொழில் சார்ந்த அனுபவங்களையும் வளர்த்துக் கொள்ள முடியும். தற்போது சமுதாயத்தில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் தங்களது தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. நீங்கள் அனுபவம் வாய்ந்த ஒரு திறமையான பணியாளர்களாக இருக்கிறீர்களானால் உங்களை எந்த ஒரு நிறுவனமும் இழக்காது, அந்த அளவிற்கு உங்களுடைய தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
மாணவர்கள் பயன்பெறும் வகையில் மிகவும் பயனுள்ள வகையில் கடந்த 12 நாட்களாக இங்கு தங்கி உயர்தரமான பயிற்சி அளித்த ஒரு தனியார் தொழில் நிறுவனத்தின் இயக்குநர்களாகிய வெங்கடேசன் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, மாணவர்கள் அனைவரும் இந்தப் பயிற்சியினை தொடக்கமாக வைத்து இன்னும் தங்களது தனித்திறமைகளை மேம்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த இடத்திற்கு செல்ல எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பயிற்சி நாட்களில் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உற்பத்தி செய்த இயந்திர பணிப்பொருட்களை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பார்வையிட்டு, அதன் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொண்ட பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) புவனேஷ்ராம், தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர்/ துணை முதல்வர் வேல்முருகன், உதவி இயக்குநர் (பொ), (திறன் மேம்பாட்டுக் கழகம்) செந்தில்குமார், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.