

விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ந் தேதி நடந்தது. இதற்கான தேர்தல் தேதி கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதியன்று தேர்தல் ஆணையத்தினால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதனால் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதோடு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகளின் போராட்டத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 13-ந் தேதி நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை தற்போது தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று முதல் வழக்கமான அலுவலக பணியில் ஈடுபட்டனர்.