விவசாய பணிகள் தீவிரம்

வத்திராயிருப்பு பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
விவசாய பணிகள் தீவிரம்
Published on

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நெல் சாகுபடி

வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், வ.புதுப்பட்டி, கூமாபட்டி, எஸ்.கொடிக்குளம், நெடுங்குளம், ரஹ்மத் நகர், கிழவன் கோவில், மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், இலந்தைகுளம், சுந்தரபாண்டியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது 7,400 ஏக்கரில் கோடைகால நெல் சாகுபடி செய்து அறுவடையை முடித்து விட்டனர். இந்தநிலையில் முதல் போக நெல் நடவிற்கு இப்பகுதியில் உள்ள விவசாயிகள் வயல்களை தயார்படுத்தி வருகின்றனர். மேலும் நெல் நாற்றுக்கள் பாவி உள்ளனர்.

தொடர்மழை

எனவே நெல் நாற்றுக்கள் தற்போது நடுவதற்கு தயாராகி உள்ளதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது வயல்களில் உள்ள வரப்புகளை சுற்றுக்கல் வெட்டியும், நெல் நாற்று நடுவதற்கு டிராக்டர் மூலம் வயல்களை தொழி அடிக்கும் பணியினை மும்முரமாக செய்து வருகின்றனர்.

மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிளவக்கல் பெரியாறு அணை, கோவிலாறு அணை பகுதிகளிலும், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள், நீர்வரத்து பகுதிகளில் விவசாயத்திற்கு போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் முதல் போக நெல் நடவு பணிகளை மேற்கொள்வதற்காக தங்கள் வயல்களை தயார்படுத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com