பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தட்டுத் தடுமாறி ஆட்சியில் அமர்ந்துள்ள தவெக அரசு, கடந்த ஆட்சியின் மீட்சியாகவே இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாத தவெக அரசைக் கண்டித்து, திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் வருகிற 18-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை; போதைப் பொருட்கள் தங்குதடையின்றி புழக்கம்; சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால், கடந்த திமுக ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக வாழ முடியாமல் பரிதவித்தனர். இந்நிலையில், நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, தட்டுத் தடுமாறி ஆட்சியில் அமர்ந்துள்ள தற்போதைய பொய்க்கால் குதிரை அரசு, கடந்த ஆட்சியின் மீட்சியாகவே இருக்கிறது என்பதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம்.

அண்மையில், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம், லால்குடி தொகுதி, புள்ளம்பாடி ஒன்றியம், சிறுகளப்பூர் பகுதியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்விஷயத்தில் தவெக அரசு துரித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். அதேபோல், போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்செயல் ஆட்சியாளர்களின் அலட்சியத்தையும், மெத்தனப் போக்கையுமே காட்டுகிறது. இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாத; போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தத் தவறிய; குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற தவெக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 18.7.2026 சனிக்கிழமை காலை 10 மணியளவில், புள்ளம்பாடி அண்ணா திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் T.N. சிவக்குமார் முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த, லால்குடி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பெண்கள் நலனையும், மக்கள் நலனையும் முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தரப்பட்ட மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com