இடைத்தேர்தலில் ஆதரவு கோரி அதிமுகவினர் நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இடைத்தேர்தலில் ஆதரவு கோரி அதிமுகவினர் நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு
Published on

சென்னை,

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 பேர் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதனால், அந்த 6 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் தமிழகத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. இதில், திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கக் கோரி, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து தங்களது ஆதரவு கோரும் கடிதத்தை வழங்கினர். இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று சென்னை கமலாலயத்தில் அஇஅதிமுக சார்பில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியன், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் ஆகியோர் வருகை தந்தனர்.

வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அஇஅதிமுகவிற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவை கோரி, அவர்கள் தங்களது ஆதரவு கோரும் கடிதத்தை வழங்கினர். இந்த நிகழ்வில் நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com