மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Published on

மதுரை,

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, "உதிரம் 2023- உதிரம் கொடுப்போம், உயிரை காப்போம்" என்ற தலைப்பில் மதுரை மருத்துவ கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.

இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, ரத்த கொடையாளர்கள், மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடந்தது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை அரசு ஆஸ்பத்திரி ரத்தவங்கியில் ரத்ததானம் கொடுத்தார்.

தமிழகம் 2-வது இடம்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 4500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்த தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது மேற்குவங்காளம் முதலிடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும் இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல், தமிழகம் முதல் இடத்திற்கு வர வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எய்ம்ஸ் மருத்துவமனை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக தொடங்க வேண்டும் என மத்திய மந்திரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தற்போது சுற்றுச்சுவர் மட்டும் தான் கட்டப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள ஜெய்கா நிறுவனத்தின் துணைத் தலைவரை இதுதொடர்பாக சந்தித்து எய்ம்ஸ் பணிகளை விரைவாக தொடங்க வலியுறுத்தி இருக்கிறோம்.

மற்ற மாநிலங்களில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு உள்ளது. ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லை. முழுமையாக கடன் வாங்கி கட்டப்பட இருக்கிறது. ஒருங்கிணைப்பில் குளறுபடிகள் இருந்ததால் தான் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டெண்டர் பணிகள் 2024-ல் முடிவடையும். அதன்பின்னர் கட்டுமான பணிகள் தொடங்கும். 2028-ம் ஆண்டு இறுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டும் போது அப்போதைய தமிழகத்தை ஆண்ட அரசு மத்திய அரசின் நிதி பங்களிப்பு வேண்டும் என்று வலியுறுத்தி இருக்க வேண்டும். அதனை செய்யவில்லை. தமிழகத்தில் 8713 சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் பழுதடைந்துள்ள கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com