மதுபாட்டிலுக்குள் கிடந்த கரப்பான் பூச்சி - மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

மதுபாட்டிலுக்குள் கரப்பான் பூச்சி கிடந்ததால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மதுபாட்டிலுக்குள் கிடந்த கரப்பான் பூச்சி - மதுப்பிரியர்கள் அதிர்ச்சி
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட டாஸ்மாக் கடை கடந்த சில மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் நேற்று காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், மதுபானம் வாங்க சென்றுள்ளனர்.

அங்கு அந்த இளைஞர்கள் தாங்கள் விரும்பிய மதுபான வகைகளை வாங்கினர். அப்போது சீல் பிரிக்கப்படாத மதுபாட்டில் ஒன்றின் உள்ளே கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அந்த மதுபாட்டிலை எடுத்துச்சென்று கடையின் விற்பனையாளர்களிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் செவிசாய்க்காமலும், மாற்று மதுபாட்டிலை வழங்காமலும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் கரப்பான் பூச்சி விழுந்து கிடந்த அந்த மதுபாட்டிலை தங்கள் செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த மதுப்பிரியர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com