

மொரப்பூர்,
மொரப்பூர் அண்ணல் நகரில் வைப்பதற்காக அம்பேத்கர் வெண்கல சிலை கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அனுமதி பெற்று தான் சிலை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அண்ணல் நகரில் அம்பேத்கர் அறக்கட்டளை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை வைக்க முடிவு செய்தனர். அதன்படி ஊர் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் ரூ.9.5 லட்சம் மதிப்பில் 8 அடி உயர அம்பேத்கர் வெண்கல சிலை வாலாஜாபேட்டை பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு மொரப்பூர் அண்ணல் நகருக்கு கொண்டு வந்தனர். இந்த சிலைக்கு பொதுமக்கள் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தனர். இந்த சிலையை அரசு அனுமதி பெற்ற பின்னர் பொது இடத்தில் வைக்கவும் அதுவரை அண்ணல் நகர் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் வைக்கவும் விழாக்குழுவினர் முடிவு செய்தனர். இதையடுத்து அம்பேத்கர் சிலையை கிரேன் மூலம் வாகனத்தில் இருந்து இறக்கி கோவிலில் வைத்து பூட்டி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரூர் தாசில்தார் வள்ளி, போலீஸ் துணை சூப்பிரண்டு சதீஷ்குமார், மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழகத்தில் சிலைகளை வைக்க அரசு அனுமதி பெற்று தான் வைக்க வேண்டும். அரசு அனுமதி இன்றி சிலை வைக்கக்கூடாது. அரசு அனுமதி பெற்ற பிறகு சிலை வைக்க வேண்டும் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து நிர்வாகிகள், பொதுமக்கள் அம்பேத்கர் சிலையை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.