தமிழகத்தை உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கு: 161 பேர் விடுதலை

தமிழகத்தை உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கில் இருந்து 161 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கு: 161 பேர் விடுதலை
Published on

திருப்பத்தூர்,

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா (வயது 25). இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 24-ந் தேதி மாயமானார். இதுதொடர்பாக பழனி கொடுத்த புகாரின்பேரில் அந்த ஆண்டு ஜூன் 15-ந் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஷமீல்அகமது (26) என்பவரை பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த மார்ட்டின் பிரேம்ராஜ் விசாரணைக்காக அழைத்துச்சென்றார்.

அப்போது, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷமீல்அகமது சிகிச்சை பலனின்றி ஜூன் 26-ந் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆம்பூரில் அப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.ஜூன் 27-ந் தேதி இரவு 7 மணியளவில் ஆம்பூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஷமில்அகமது மரணத்துக்கு காரணமான போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பயங்கர கலவரம் வெடித்தது.

இதில் 15 பெண் போலீசார் உள்பட 91 பேர் படுகாயமடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், 7 போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 4 மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. தமிழகத்தையே உலுக்கிய இந்த கலவரத்தில் தொடர்புடைய 191 பேர் மீது போலீசார் 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேலூர், கடலூர், சேலம் ஆகிய சிறைகளில் அடைத்தனர்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த 26-ந் தேதி பகல் 12 மணியளவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஆம்பூர் கலவரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு 28-ந் தேதி (அதாவது இன்று) வழங்கப்படும் என நீதிபதி மீனாகுமாரி கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

அதன்படி, இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் ஆம்பூர் கலவரம் தொடர்பாக பதிவான வழக்குகளில் இருந்து 161 பேரை விடுதலை செய்து நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார். 7 கட்டமாக பதியப்பட்ட வழக்குகளில் 6 கட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 161 (இறப்பு உட்பட) பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முதல் பிரிவில் 26 பேர், 2-வது பிரிவில் 35 பேர், 3-வது பிரிவில் 34 பேர் உட்பட 161 விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கலவரத்தின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக முன்னாள் எம்.எல்.ஏ. அஸ்லாம் பாஷாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாஷாவின் சொத்துக்களை பறிமுதல் செய்து நஷ்டத்தை ஈடுசெய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com