

சென்னை,
தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உதயசந்திரனின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பொது வருங்கால வைப்பு நிதி (தமிழ்நாடு) விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. விதி 15 (ஏ) -ன் பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக அதிகபட்சமாக ரூ.20 லட்சம் அல்லது மாதாந்திர ஊதியத்தில் 75 மடங்கு, இதில் எது குறைவோ அதை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்பணம் வழங்குவதற்கான திட்டத்தின் கீழ், முன் பணத்தை எடுக்கும் சந்தாதாரர், மாநில அரசு அல்லது மத்திய அரசு அல்லது பொது அல்லது தனியார் நிதி நிறுவனங்களால் வீடு கட்டும் நோக்கத்திற்காக கடன் பெறும் விஷயத்தில், திருத்தப்பட்ட துணை விதியின் கீழ் எடுக்கப்படும் முன் பணத்தொகை அல்லது கடன் ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட நிதி உதவியுடன் சேர்த்து ரூ.50 லட்சத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது. இவ்வாறு இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.