

சென்னை,
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாக, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கட்டிடம் அமெரிக்க கொடியின் வண்ணங்களில் ஒளிரச் செய்யப்பட்டது. அமெரிக்க துணை தூதரக கட்டிடமும் அமெரிக்க கொடிகள் மற்றும் சிவப்பு, வெள்ளை, நீல நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் சுதந்திர தேவி சிலை படங்கள் பொறிக்கப்பட்ட 2 ஆயிரம் சிறப்பு ஆட்டோக்கள் சென்னை முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. இவை அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், அமெரிக்கா-இந்தியா உறவின் துடிப்பான தன்மையையும் வெளிப்படுத்துகின்றன என அமெரிக்க துணை தூதரகம் தெரிவித்துள்ளது.
"உங்கள் பள்ளியில் அமெரிக்கா" என்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளுடன் அமெரிக்க துணை தூதரகம் இணைந்து வினாடி-வினா போட்டி, ஆவணப்பட திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.