

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியை சேர்ந்த சக்தி என்பவருடைய தாயார் மீனாள் (69 வயது). இவர் மதுரை நெல்பேட்டையில் உள்ள மார்க்கெட் பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் பழங்கள் வாங்கியபோது 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பேசி பழகியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் அழைத்ததின்பேரில், மீனாள், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோஸ்குண்டு பகுதிக்கு ஒருவரிடம் குறி கேட்க சென்றுள்ளார். பின்னர் ஊருக்கு புறப்பட்டபோது, மீனாள் அந்த பெண்ணிடம் இருந்து தண்ணீர் வாங்கி குடித்துள்ளார்.
தண்ணீரில் மயக்க மருந்து கலந்து இருந்ததை அறியாத மூதாட்டி, கோஸ்குண்டு பகுதியில் மயக்கமடைந்து சாய்ந்தார். அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை அந்த பெண் திருடிக்கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அப்பகுதியில் இருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அறிந்த அவரது மகன் சக்தி கொடுத்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி, அந்த பெண்ணை தேடிவருகின்றனர்.