நிபந்தனை ஜாமீனில் விடுக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் இன்று கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து

திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ஜாமீன்தாரர்களுடன் கோர்ட்டில் ஆஜரானார்.
நிபந்தனை ஜாமீனில் விடுக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் இன்று கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து
Published on

தூத்துக்குடி,

10 நாட்கள் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இன்று அனிதா ராதாகிருஷ்ணன் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்டுள்ளார்.

சர்ச்சை பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் கடந்த மாதம் 20-ந் தேதி நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அவர் பேசும்போது தமிழக முதல்-அமைச்சர் சினிமா நடிகைகளோடு ஜாலியாக இருந்தார். அவரை கொண்டு வந்து சட்டசபையில் உட்கார வைத்த உடன் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் என்று அவதூறு பேசியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக த.வெ.க. கட்சி நிர்வாகிகள் ஆத்தூர் போலீ சில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மீது பி.என்.எஸ். 352 மற்றும் 353/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது

இதற்கிடையே, முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை அவர் கைதுசெய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, எஸ்.பி. அலுவலகத்தில் அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இதன் பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம், மாஜிஸ்திரேட் ஒன்றரை மணிநேரம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். ரூ.10 ஆயிரம் செலுத்தி விட்டு சொந்த ஜாமீனில் செல்லும்படி உத்தரவிட்ட அவர், 10 நாட்களுக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

கோர்ட்டில் ஆஜரான அனிதா ராதாகிருஷ்ணன்

இந்நிலையில், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ஜாமீன்தாரர்களுடன் கோர்ட்டில் ஆஜரானார். அவரது சொந்த ஊரான தண்டுபத்து பகுதியை சேர்ந்த பாலகணேசன் மற்றும் சுரேஷ் ஆகியோர் ஜாமீன்தாரர்களாக ஆஜராகினர். 10 நாட்கள் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இன்று அவர் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com