“தமிழ் சமூகத்திற்கு புதிய அடையாளம் தந்தவர் அண்ணா” - செல்வப்பெருந்தகை புகழாரம்

சாதி, மத எல்லைகளைக் கடந்து, மனித நேயத்தையும் சுயமரியாதையையும் முன்னிறுத்தும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தினார்.
செல்வப்பெருந்தகை
Published on

சென்னை,

தமிழ் சமூகத்திற்கு புதிய அடையாளம் தந்தவர் அண்ணா என்று முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, செல்வபெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

புகழாரம்

தமிழ் சமூகத்திற்கு ஒரு புதிய அடையாளத்தை அமைத்த மாபெரும் ஆளுமை, எளிய மக்களுக்கும் அதிகாரம் சாத்தியம் என்பதை நிரூபித்த தொலைநோக்குச் சிந்தனையாளர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என அரசியல் வாழ்விலும் தனிமனித வாழ்விலும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய உயரிய தாரக மந்திரமாக இதை அமைத்து தந்தார். சாதி, மத எல்லைகளைக் கடந்து, மனித நேயத்தையும் சுயமரியாதையையும் முன்னிறுத்தும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தினார்.

'தமிழ்நாடு'

'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்ற கொள்கை முழக்கம் மூலம் மாநில உரிமைகளுக்கான அடித்தளமிட்டார். நம் தாய் நிலத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டி, வரலாற்றுச் சாதனையின் மூலம் தமிழ் மொழியின் பெருமையையும் அடையாளத்தையும் உலகறியச் செய்தார்.

'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்ற அண்ணாவின் வாக்கிற்கேற்ப, துணிவு, இன்சொல், மற்றும் தொலைநோக்குப் பார்வையோடு சமூகத்தைச் செப்பனிட இந்நாளில் உறுதியேற்போம். தமிழ் மண்ணிற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்த பேரறிஞர் அண்ணா புகழும், கொள்கைகளும் என்றும் நிலைத்து வாழ்க.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com