மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: தாய்ப்பால் குடித்துவிட்டு தூங்கிய பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: தாய்ப்பால் குடித்துவிட்டு தூங்கிய பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
Published on

சென்னை,

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசப்புரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 28). எலக்ட்ரீசியனான இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 28-ந்தேதி சங்கீதாவுக்கு பெண் குழந்தை ஒன்று அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது.

சங்கீதா நேற்று அதிகாலை 3 மணியளவில் குழந்தைக்கு பாலூட்டிவிட்டு தூங்கவைத்துள்ளார். பின்னர் 2 மணி நேரம் கழித்து குழந்தை எந்தவித அசைவும் இன்றி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே விக்னேசும், சங்கீதாவும் குழந்தையை சென்னை கஸ்தூரிபா காந்தி ஆரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்தது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறும்போது, "குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு, ஏப்பம் விடுவதற்காகவும் செரிமானம் ஆவதற்காகவும் சிறிதுநேரம் கழித்து குழந்தையின் முதுகை லேசாக தடவலாம். இது குழந்தை ஏப்பம்விட உதவிகரமாக இருப்பதோடு, பால் வாந்தியெடுப்பதையும் தடுக்கும். இதன்மூலம் கவனகுறைவால் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிப்பதை தடுக்கலாம்" என்றார்.

இதேபோன்ற சம்பவம் கடந்த மாதம் சைதாப்பேட்டையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com