

கரூர்,
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு, டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
தற்போது தவெக அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சகோதரர் அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். அவர்களிடம் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையிலான உயர்மட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கரூரில் ராமேஸ்வரபட்டியில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மண்மங்கலம் அருகே உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு, அவரது உதவியாளர் சுப்பிரமணி வீடு, திமுக நிர்வாகி பாஸ்கரன் வீடு மற்றும் கோதைநகர் பகுதியில் உள்ள கார்த்தி, ரமேஷ் ஆகியோரின் வீடுகள் உட்பட மொத்தம் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கரூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது. செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதன் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. சோதனையில் முடிவிலேயே முழு விவரமும் தெரியவரும்.