நெருக்கடி நிலை எதிர்ப்பு போராட்டம்: சிறை சென்ற பெண்களை நினைவுகூர்ந்த வானதி சீனிவாசன்

தமிழகத்தில் பாஜக ஆட்சி மலர்வதை யாராலும் தடுக்க முடியாது. அது காலத்தின் கட்டாயம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
நெருக்கடி நிலை எதிர்ப்பு போராட்டம்: சிறை சென்ற பெண்களை நினைவுகூர்ந்த வானதி சீனிவாசன்
Published on

சென்னை,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

ஜூன் 25. இந்திய வரலாற்றில் மிக மிக முக்கியமான நாள்.

நெருக்கடி நிலை

1975-ம் ஆண்டு இதே நாளில் தான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி 'நெருக்கடி நிலை'யை பிரகடனப்படுத்தினார். சுமார் 2 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் சர்வாதிகார, கொடுங்கோல் ஆட்சி நடைமுறையில் இருந்தது . சுதந்திர இந்தியாவின் கருப்புப் பக்கங்கள் அவை.

இந்திராவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஆர்.எஸ் எஸ். இயக்கமும் அன்றிருந்த 'ஜன சங்கம்' கட்சியும் போர்க்கோலம் பூண்டது. இந்திராவின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்தால் உடனே கைது, சிறையில் கொடுமைகள் என்றிருந்த போதும் சளைக்காமல் போராடினர்.

சிறை சென்றவர்கள்

இங்கே நான் பகிர்ந்துள்ள படம் 1977 -ல் ஜனதா கட்சி ஆட்சியின்போது எடுக்கப்பட்டது. இதில் மோகனா, அயனாவரம்(தந்தை பெயர் கந்தசாமி), கஸ்தூரி, திரு.வி.க நகர்(கணவர் பெயர் பழனி), அமிர்தவள்ளி, சின்ன பரமேஸ்வரி, மாதவரம்( இவர் இப்போது இல்லை), பாரதி, திருவல்லிக்கேணி(கணவர் பெயர் ரங்கராஜன்), சின்ன கல்யாணி, பெரம்பூர்(கணவர் பெயர் சிவக்குமார்), பாரதமாதா பரமேஸ்வரி, பெரம்பூர்(தந்தை பெயர் வேணுகோபால்), கமலா தேவேந்திரன், ஓட்டேரி(கணவர் பெயர் தேவேந்திரன்), பெரிய கல்யாணி, பெரம்பூர், ஜெயம்மா எத்திராஜ், திரு.வி.க நகர்( இவர் இப்போது இல்லை), சந்திரம்மா கோதண்டபாணி, திரு.வி.க நகர்(இவரும் இப்போது இல்லை) அம்சவள்ளி, ஓட்டேரி(இவரும் மரணமடைந்து விட்டார்) உள்ளிட்டோர் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். `இரண்டாவது சுதந்திரப் போர்' என்று வர்ணிக்கப்படும் நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்கள். சிறை சென்றபோது இவர்களின் வயது 13 லிருந்து 35க்குள்.

90 நாட்கள் சிறை

இதில் அமிர்தவள்ளி என்பவர் சிறை சென்றபோது 13 வயது. சென்னை அயனாவரத்தில் தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதால் கைதானவர். மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தால் விட்டு விடுவதாகக் காவல் துறையினர் கூறியும் மறுத்து சென்னை மத்திய சிறையில் 90 நாள்கள் இருந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட தியாகிகளின் அஸ்திவாரத்தில்தான் பாஜக எழுந்து நிற்கிறது. பாஜகவின் வேர்கள் தமிழகம் முழுவதும் படர்ந்து நிற்கிறது. ஒரு நாள் அது மரமாகி, பூத்துக் குலுங்கும். தமிழகத்தில் பாஜக ஆட்சி மலர்வதை யாராலும் தடுக்க முடியாது. அது காலத்தின் கட்டாயம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com