

சென்னை,
திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்ததாக கூறி, தமிழக கவர்னரை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் இன்று கவர்னர் மாளிகை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “திருவள்ளுவர் சிலைக்கு சாயத்துணியை அணிவித்ததை கண்டித்தும், திருவள்ளுவரை ஒரு சனாதனி என்று கூறியதை கண்டித்தும் இன்று மாலை பனகல் மாளிகைக்கு எதிரே நாங்கள் திரள்வோம். கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவதற்கு கருங்கொடிகளுடன், எங்கள் கருஞ்சட்டைப் படை புறப்பட்டு செல்லும். அமைதியான வழியில், எந்த அமலிக்கும் இடம் கொடுத்து விடாமல் எங்கள் ஜனநாயக கடமையை நாங்கள் ஆற்றுவோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, அண்ணாமலை புதிதாக அரசியல் இயக்கம் தொடங்கியிருப்பது குறித்து வைகோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “ஜனநாயகத்தில் யாரும் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம். தற்போது அண்ணாமலை தொடங்கியிருக்கிறார், அவ்வளவுதான்” என்றார்.
மேலும் மல்லை சத்யா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “விலகிச் சென்றவர்களின் உளரலுக்கெல்லாம் வைகோ பதில் சொல்லுகிறவன் அல்ல” என்று அவர் கூறினார்.