வன்கொடுமை தடுப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
திருநெல்வேலியில் விசாரணை நீதிமன்றம் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை முயற்சி வழக்கில் விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை, குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவில் உயர்நீதிமன்றம் உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு முன்விரோதம் மற்றும் கோவில் திருவிழா தகராறு காரணமாக வடக்கு தாழையூத்தை சேர்ந்த பெண்மணி ஒருவரை, ஜாதியை இகழ்ச்சி செய்தும், கொலை முயற்சி செய்த வழக்கில், சுப்பு(எ) சுப்பிரமணியன், ஜேக்கப், பிரவீன் ராஜ் உள்பட 9 பேருக்கு எதிராக தாழையூத்து காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்த நிலையில், திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி, இந்த வழக்கினை விசாரணை செய்ததில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் விசாரணையின் போதே மரணம் அடைந்தும், இருவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மற்ற ஆறு குற்றவாளிகளான சுப்பு(எ) சுப்பிரமணியன், சுல்தான்மைதீன், கார்த்திக், சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ஜேக்கப் மற்றும் பிரவீன்ராஜ், விஜயராமமூர்த்தி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நீதிபதி அவர்கள் கடந்த, 8.10.2024 அன்று இரட்டை ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேற்சொன்ன குற்றவாளிகளான கார்த்திக், ஜேக்கப், பிரவீன்ராஜ் ஆகிய 3 பேரும், விசாரணை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த நிலையில், மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணை நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பினை நேற்று உறுதி செய்து, தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

