

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றுள்ளது. அதேவேளை, போட்டியிட மக்கள் நீதி மய்யம் விருப்பமனு விநியோகம் செய்தது. விருப்ப மனு கட்டணம் ரூ. 50 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து, தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ரூ. 50 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனு பெற்றுச்சென்றனர். மொத்தம் 60 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதேவேளை, தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். மேலும், தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். இதையடுத்து, விருப்ப மனு கட்டணம் செலுத்தி விருப்பமனு வாங்கியவர்களுக்கு அந்த பணம் ரூ. 50 ஆயிரம் திரும்பி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், விருப்ப மனு கட்டணம் ரூ. 50 ஆயிரம் செலுத்தி மொத்தம் 60 பேர் விருப்ப மனு வாங்கியுள்ள நிலையில் அந்த பணம் கட்சி நிதிக்கு சென்றுவிட்டதாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர், விருப்பமனு வாங்கியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தவர்கள், தாங்கள் செலுத்திய கட்டணத் தொகையை (ரூ. 50 ஆயிரம்) தலைமை அலுவலகத்தில் நாளை முதல் வரும் 16-ம் தேதிக்குள் நேரில் வந்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.