மின்னணு பயிர் கணக்கீடு பணிக்கு 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்

ஒப்பந்த பணியாளர் நிறுவனம் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு மூலம் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.
மின்னணு பயிர் கணக்கீடு பணிக்கு 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
Published on

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்னணு பயிர் கணக்கீடு பணியானது 2024-ம் ஆண்டு ராபி பருவம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்கணக்கீட்டின்போது பயிர் சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பாசன முறை உள்ளிட்ட விவசாயம் சார்ந்த விவரங்களை புகைப்படத்துடன், செயலி மூலம் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.

மேலும் ஆண்டிற்கு மூன்று முறையாக காரீப், ராபி மற்றும் கோடைப் பருவங்களில் இந்த மின்னணு பயிர் கணக்கீடு மேற்கொள்ளப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டில் (2025-26) இந்த மின்னணு பயிர் கணக்கீடு பணியானது ஒப்பந்த பணியாளர் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஒப்பந்த பணியாளர் நிறுவனம் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு மூலம் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.

விருப்பமுள்ள நிறுவனங்கள் விரிவான விவரங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு வேளாண்மை பட்டதாரி அல்லது பட்டய வேளாண்மை படித்தவர் அல்லது இதர பட்டப்படிப்பு படித்தவர்கள், இணையதள ஆண்ட்ராய்டு செயலியை உபயோகிக்க தெரிந்தவர்களாக உள்ளவர்கள் இக்கணக்கீட்டு பணியினை மேற்கொள்ள தகுதியுடையவர்.

ஒப்பந்த பணியாளர் நிறுவனம் மேலே குறிப்பிட்ட தகுதியின் அடிப்படையில் பணியாளர்களை அந்தந்த கிராமங்களிலுள்ள படித்த இளைஞர்களை தேர்வு செய்ய வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 335 கிராமங்களில் மின்னணு பயிர் கணக்கீடு பணி மேற்கொள்ளவிருக்கிறது. இதிலுள்ள சர்வே எண்களை பதிவு மேற்கொள்வதன் அடிப்படையில் ஒரு சர்வே எண்ணுக்கு 2 சதவீதம் சேவை வரி உள்பட ரூ.20 வழங்கப்படும்.

திருநெல்வேலி, மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு ஒப்பந்த பணியாளர் நிறுவனத்தினை தேர்வு செய்யும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவன பணியாளர்கள் அடுத்த மாதம் ஆகஸ்ட் 1ம்தேதி முதல் மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணியினை தொடங்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் வரும் 24ம் தேதிக்குள் விண்ணப்பத்தினை பதிவு தபாலில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வருகின்ற 25ம்தேதி மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வுகுழு ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் 335 வருவாய் கிராமங்களுக்கு ஒரு நபர் வீதம் 335 பணியாளர்களை தேர்வு செய்து பட்டியல் தர வேண்டும். இப்பணியினை எவ்வித தொய்வும் இன்றி உரிய பயிர் பருவ காலத்தில் செய்து முடித்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com