திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு சரக்கு சேவைக்கு ஒப்புதல் - துரை வைகோ வரவேற்பு

திருச்சியை தென்னிந்தியாவின் முக்கிய சரக்கு மற்றும் ஏற்றுமதி மையமாக உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துரை வைகோ தெரிவித்தார்.
மறுமலர்ச்சி திமுக எம்.பி. துரை வைகோ
Published on

சென்னை,

திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டுச் சரக்கு சேவைக்கு ஒப்புதல் வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும் என்று துரை வைகோ தெரிவித்தார். இது தொடர்பாக, மறுமலர்ச்சி திமுக எம்பி துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சரக்கு சேவை

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முனையம் வழியாக உள்நாட்டு சரக்கு சேவையை தொடங்குவதற்கு, சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புப் பணியகம் ஒப்புதல் வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும்.

பலனளிக்கும்

தற்போது திருச்சி விமான நிலையத்தில் சர்வதேச சரக்குகள் பயணிகள் விமானங்கள் (Passenger Flights) மூலமாகவே கையாளப்பட்டு வருகின்றன. அதேபோன்று, இந்த புதிய ஒப்புதலின் மூலம் இனி உள்நாட்டு சரக்குகளும் பயணிகள் விமானங்கள் மூலமாகவே அனுப்பப்படுவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. இது திருச்சி மற்றும் மத்திய தமிழ்நாட்டின் தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், வணிகர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு குறிப்பிடத்தக்க பலனளிக்கும்.

கோரிக்கை

அதே நேரத்தில், திருச்சி விமான நிலையத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஏர் கூரியர் சரக்கு முனையத்தை முழுமையாக செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை நான் தொடர்ந்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக 08.08.2025 மற்றும் 03.06.2026 ஆகிய தேதிகளில் நேரிலும் இதுகுறித்து கோரிக்கை வைத்துள்ளேன்.

நடவடிக்கை

மேலும், எதிர்காலத்தில் பிரத்யேக சரக்கு விமானங்கள் திருச்சி விமான நிலையத்தில் நேரடியாக இயக்கப்படுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் எனது வலியுறுத்தலாகும். அதற்கான உட்கட்டமைப்பு மற்றும் தேவையான அனுமதிகளை விரைவாக ஏற்படுத்தி, திருச்சியை தென்னிந்தியாவின் முக்கிய சரக்கு மற்றும் ஏற்றுமதி மையமாக உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரவேற்பு

இந்த உள்நாட்டு சரக்கு சேவைக்கான ஒப்புதலை மனமார வரவேற்கிறேன். இதனைத் தொடர்ந்து சர்வதேச ஏர் கூரியர் சரக்கு முனையமும் செயல்பாட்டிற்கு வந்து, எதிர்காலத்தில் பிரத்யேக சரக்கு விமானங்களும் திருச்சியில் இயக்கப்படும் நாள் விரைவில் வர வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com