தண்டனை கைதிகளை திருமணம் செய்ய பெண்கள் நிர்ப்பந்திக்க படுகிறார்களா? - பெண்கள் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சாதி, மத நிர்ப்பந்தங்களினால் ஆயுள் தண்டனை கைதிகளை திருமணம் செய்ய பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனரா? என்பது விசாரணை நடத்தும் நடைமுறை கொண்டு வருவது குறித்து தேசிய, மாநில பெண்கள் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தண்டனை கைதிகளை திருமணம் செய்ய பெண்கள் நிர்ப்பந்திக்க படுகிறார்களா? - பெண்கள் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் தன் கணவரை விடுப்பில் (பரோலில்) விடுவிக்க கோரி ஒரு பெண் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்த போது, தனக்கு திருமணம் ஆகும் போது தன் கணவன் ஒரு ஆயுள் தண்டனை கைதி என்றே தெரியாது. கொலை வழக்கில் கீழ்கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து, இடைக்கால ஜாமீனில் வெளியில் வந்த தன் கணவர் அந்த விவரங்களை எல்லாம் மறைத்து தன்னை திருமணம் செய்ததாக அந்த பெண் கூறினார். இதை கேட்டு நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபோல ஒரு வழக்கு அல்ல பல வழக்குகள் நீதிபதிகள் முன்பு அடுத்தடுத்து விசாரணைக்கு வந்தது. அண்மையில், அஸ்லாம் என்பவரை 30 நாட்கள் விடுப்பில் விட சிறைத்துறைக்கு உத்தரவிடக்கோரி அவரது மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இவரும் ஆயுள் தண்டனை கைதி என்று தெரிந்தே திருமணம் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கணவரை விடுப்பில் விட வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுக்கிறார். அவர் தாக்கல் செய்த மனுவில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் விடுப்பில் வெளியில் வந்த தன் கணவர், தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், அன்றே அவர் சிறைக்குள் சென்று விட்டதாகவும், தற்போது மாமியாருடன் வசிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த பெண் சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்துகொண்டாரா? அல்லது சாதி, மத நிர்ப்பந்தங்களின் அடிப்படையில் இவருக்கு கட்டாயத் திருமணம் நடந்ததா? என்பது தெரியவில்லை.

இந்த ஒரு வழக்கு மட்டுமல்ல, பல வழக்குகளில் ஆயுள் தண்டனை கைதிகள் விடுப்பில் வெளியில் வந்து திருமணம் செய்து விட்டு உடனே சிறைக்குள் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

ஒரு ஆயுள் தண்டனை கைதியை திருமணம் செய்து விட்டு, தனிமையில் வாழும் ஒரு பெண் அனுபவிக்கும் மனவேதனை, துன்பங்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது. எனவே, தண்டனை கைதிகளுக்கு திருமணம் நடப்பதற்கு முன்பு, மணப்பெண் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தான் திருமணம் செய்கின்றாரா? அல்லது சாதி, மத நிர்ப்பந்தங்களின் அடிப்படையில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்படுகிறாரா? என்பதை பெண்கள் ஆணையம் விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும்.

இப்போதெல்லாம், சமுதாயத்தில் சாதாரண வாழ்க்கையை மேற்கொண்டு வரும் ஆண்மகனை திருமணம் செய்துகொள்ளவே பெண்கள் ஏராளமான நிபந்தனைகளை விதிக்கின்றனர். அப்படியிருக்கும் போது, கைதியை, அதுவும் ஆயுள் தண்டனை கைதியை திருமணம் செய்ய எந்த ஒரு பெண்ணும் விரும்ப மாட்டாள். எனவே, இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தேவை. ஒரு பெண் ஆயுள் தண்டனை கைதியை திருமணம் செய்தால், அவளது வாழ்க்கை முடங்கிப்போய் விடும்.

அவள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையாக வேதனைகளை அனுபவிக்க வேண்டும். ஒரு திருமணமான பெண்ணுக்கு காலம் முழுவதும் தார்மீக ஆதரவும், உணர்வுகளை பகிர்ந்து கொள்ள உடல் ரீதியான ஒரு தோழமையும் கணவனிடம் இருந்து தேவைப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை. அதற்காக, தண்டனை கைதிகளை திருமணம் செய்ததாக பெண்கள் தொடர்ந்த பிற ஆட்கொணர்வு வழக்குகளும், இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும். இந்த வழக்குகளில் தேசிய மற்றும் மாநில பெண்கள் ஆணையங்களையும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றை எதிர்மனுதாரர்களாக தாமாக முன் வந்து சேர்க்கின்றோம்.

சாதி, மத நிர்ப்பந்தங்களினால் தண்டனை கைதிகளை திருமணம் செய்ய பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனரா? என்பது குறித்தும், திருமணத்துக்கு முன்பே இதுகுறித்து விசாரணை நடத்தும் நடைமுறையை கொண்டு வருவது குறித்தும் இந்த அமைப்புகள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com