

வேலூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மின்னூரை சேர்ந்தவர் சேகர் (வயது 33). ஐ.டி. நிறுவன ஊழியர். இவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது கிராமத்தில் உள்ள நிலம், வீட்டுமனையை அளவீடு செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்தார். ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் நிலஅளவையராக பணிபுரியும் வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி (37) நிலம், இடத்தை அளவீடு செய்ய லஞ்சமாக ரூ.8 ஆயிரம் தரும்படி சேகரிடம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுகள் ரூ.8 ஆயிரத்தை சேகரிடம் வழங்கினர். அவர் அதனை நிலஅளவையர் பாலாஜியிடம் நேற்று முன்தினம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் லஞ்சமாக பெற்ற ரூ.8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.22 லட்சம் பறிமுதல்
அதைத்தொடர்ந்து வேலூர் சேண்பாக்கம் கழனிகாட்டுத்தெருவில் உள்ள பாலாஜியின் வீட்டில் மாலை 4 மணியளவில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையானது நள்ளிரவு 2 மணி வரை நீடித்தது.
10 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பாலாஜி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.22 லட்சத்து 84 ஆயிரத்து 650 சிக்கியது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரின் வங்கிக்கணக்குகள், அசையும், அசையா சொத்துகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
இதனை தொடர்ந்து வேலூர் கோர்ட்டில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டு குடியாத்தம் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.