ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணைய விசாரணை நிறைவு

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவடைந்துள்ளது.
ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணைய விசாரணை நிறைவு
Published on

சென்னை,

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி மனு அளித்திருந்தார்.

கடந்த 19 ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் புகழேந்தி ஆஜராகியிருந்தார். அதனை தொடர்ந்து ஏப்ரல் 26 ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு அவரிடம் கூறப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் ஆறுமுகசாமி ஆணையத்தில் புகழேந்தி ஆஜரானார். அவரிடம் ஆணையம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

விசாரணைக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்தில் வலியுறுத்தியுள்ளேன். அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என நம்புகிறேன். தமிழக அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என வாக்குமூலம் அளித்துள்ளேன் என கூறினார்.

இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 159 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவடைந்துள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com