ராகுல் காந்தி தமிழகத்தில் கால்வைத்ததும் காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு வந்து விட்டது - மாணிக்கம் தாகூர்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி
Published on

சென்னை,

ராகுல் காந்தி தமிழகத்தில் கால்வைத்ததும் காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு வந்து விட்டது என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

காவிரி விவகாரம்

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது;-

கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கர்நாடகாவிற்காகத்தான் பேசுவார். அவருக்கு தமிழ்நாட்டின் நலன் முக்கியமல்ல. எனக்கு தமிழ்நாடு நலன்தான் முக்கியம் முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகாவிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் தவறு இல்லை என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டிற்கு எப்படியாவது தண்ணீர் வர வேண்டும்.

தமிழ்நாடும் கர்நாடகாவும் இந்தியா பாகிஸ்தான் கிடையாது. பேசி தீர்க்கும் நிலையை உருவாக்க வேண்டுமென முதல்-அமைச்சர் விஜய் நினைப்பதே பாராட்டுக்குரிய விஷயம். இரு மாநில முதல்-மந்திரிகளும் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது. காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை. அரசியல் செய்வதுதான் முக்கியமாக உள்ளது.

தொகுதி மறுவரையறை

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்க வேண்டும். திமுக கூட்டணியை விட்டு விலகினாலும் தொகுதி மறுவரையறை பிரச்னையில் காங்கிரஸ் மாறவில்லை.

தொகுதி மறுவரையறையை எதிர்த்து முன்பு நகலை எரித்தது யார்? பட்டாசு வெடித்தது யார்?. தொகுதி மறுவரையறையில் எட்டப்பர்கள் பாஜக, அதிமுக, பாமகதான். துரோகம் செய்வோரே எட்டப்பர்கள். ராகுல் அதைத்தான் குறிப்பிட்டார். தொகுதி மறுவரையறை தமிழகத்துக்கு மிகவும் முக்கியமானது.

“நம்பிக்கையை யார் விற்கிறார்கள் என்பது அடுத்த வாரம், 17ஆம் தேதி தெரிந்துவிடும். வாய் வசனம் பேசுவதை தயாநிதி மாறன் நிறுத்த வேண்டும். மக்கள் இதன் காரணமாகவே உங்களை உட்கார வைத்திருக்க வேண்டிய இடத்தில் உட்கார வைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தை நோக்கி வந்த காவேரி

தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லாமலையா ராகுல் காந்தி இங்குவந்து பேசிவிட்டு சென்றிருக்கிறார். தொகுதி மறுவரையறை, தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பெரிய பிரச்சினை அது குறித்து பேசியுள்ளார். ராகுல் காந்தி வந்த நேரம் மழை பெய்தது. அதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு, கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தமிழகத்தில் கால்வைத்ததும் காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு வந்து விட்டது எனத் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com