

தூத்துக்குடி,
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்- 2026-க்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் அவர்களது பொறுப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தலைமை வகித்தார்.
வாக்கு எண்ணும் நாளன்று பின்பற்ற வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து அனைத்து ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கும் கலெக்டர் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக வாக்கு எண்ணும் மைய ஏற்பாடுகள், பொதுத் தொடர்பு மற்றும் மனிதவள மேலாண்மை, நுண் பார்வையாளர்களின் பணிகள் மற்றும் ஊடக மைய செயல்பாடுகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) சீல் வைக்கும் முறையை மேற்பார்வையிடுதல்.
வீடியோகிராபி, சிசிடிவி கண்காணிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடுதல், வாக்கு எண்ணும் மையத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை நியமித்தல், குடிநீர், சுகாதாரம், உணவு வழங்கல் மற்றும் போக்குவரத்து மேலாண்மை, தபால் வாக்குகள் எண்ணுதல் மற்றும் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு எந்திரங்களை பாதுகாப்பாக மாவட்டக் கிடங்கில் ஒப்படைத்தல், 213 முதல் 218 வரையிலான சட்டமன்றத் தொகுதிகளுக்கான மேற்பார்வை அலுவலர்களின் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன், மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் ப்ரியங்கா, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் சுகுமாறன், சிவசுப்பிரமணியன், சங்கரலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கல்யாணசுந்தரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷீலா மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.