முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

புதுக்கோட்டை,

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர் சி.விஜயபாஸ்கர். தற்போது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள விஜயபாஸ்கர், அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அப்போது விஜயபாஸ்கர் தொடர்புடைய 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கடந்த மே மாதம் 210 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதுவரை 5 முறை இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில் 3 முறை விஜயபாஸ்கரும் ஒருமுறை அவரது மனைவி ரம்யாவும் 2 முறை அவர்களது வக்கீல்களும் விசாரணைக்கு ஆஜராகினர்.

6-வது முறையாக இந்த வழக்கு இன்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கரும் அவரது மனைவி ரம்யாவும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது வக்கீல்கள் ஆஜரான நிலையில் இந்த வழக்கை அடுத்த மாதம்(டிசம்பர்) 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com