தூத்துக்குடியில் நாளை உதவிப்பேராசிரியர் தேர்வு: கலெக்டர் இளம்பகவத் தகவல்


தூத்துக்குடியில் நாளை உதவிப்பேராசிரியர் தேர்வு: கலெக்டர் இளம்பகவத் தகவல்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 722 பேர் உதவிப்பேராசிரியர் தேர்வு எழுத உள்ளனர் என்று கலெக்டர் இளம்பவத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடைபெறவுள்ள உதவிப்பேராசிரியர் தேர்வு நாளை (27.12.2025, சனிக்கிழமை) மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 722 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

இதற்காக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை, மின்சார துறை, வருவாய் துறை, போக்குவரத்துத்துறை, தீயணைப்பு துறை, மருத்துவதுறை ஆகிய துறை அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அனைத்து மையங்களிலும், போதுமான காவல் துறை வசதியும், மின்சார வசதியும், தேர்வர்கள் சென்று தேர்வு எழுதுவதற்கு போக்குவரத்து சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக முன்னதாகவே முதன்மைக்கல்வி கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர் ஆகிய அனைத்து நிலை அலுவலர்களுக்கும் தனித் தனியாக கூட்டம் நடத்தப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக கூறப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் உள்ள தேர்வு அறைகள் தனித்தனியாக CCTV வசதியுடனும், குடிநீர் வசதியுடனும், மின்சார வசதியுடனும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தேர்வானது முற்பகல், பிற்பகல் என இரு வேளைகளிலும் நடைபெறுவதால் அனைத்து தேர்வர்களும் முற்பகல் தேர்விற்கு காலை 8.30 மணிக்கும் பிற்பகல் தேர்விற்கு மதியம் 2 மணிக்கும் தேர்வு மையங்களுக்கு வருகை புரிய வேண்டும். காலை 9 மணிக்கு மேல் மதியம் 2.30 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வு எழுதுவதற்கு தேர்வுக்கூட நுழைவு சீட்டு, புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டை (AADHAR CARD, PAN CARD, DRIVING LICENCE, PASS PORT ஏதேனும் ஒன்று) கருப்பு பந்து மை பேனா 2 ஆகியவை மட்டுமே கொண்டு வர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தவிர வேறு எந்த ஒரு எலக்ட்ரானிக் பொருட்களோ, கைப்பேசி போன்ற மற்ற பொருள்களோ அனுமதிக்க இயலாது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story