உழைத்தால் உயர்ந்த இடத்தை அடையலாம்: ‘நல்லது செய்தால் பதவிகள் தேடி வரும்’ பாராட்டு விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

உழைத்தால் உயர்ந்த இடத்தை அடையலாம் என்றும், நல்லது செய்தால் பதவிகள் தேடி வரும் என்றும் சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
உழைத்தால் உயர்ந்த இடத்தை அடையலாம்: ‘நல்லது செய்தால் பதவிகள் தேடி வரும்’ பாராட்டு விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
Published on

சென்னை,

அகில இந்திய தமிழ் சான்றோர் பேரவை சார்பில், தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகான சபாவில் நேற்று நடந்தது. விழாவுக்கு, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டிய ராஜன் தலைமை தாங்கினார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் நடிகர் ஆர்.சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் சான்றோர் பேரவை ஒருங்கிணைப்பாளர் எம்.என்.ராஜா வரவேற்றார்.

தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தட்சிணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாஸ், சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் ஏ.வி.எஸ்.மாரிமுத்து, சிலம்புச்செல்வர், மா.பொ.சி. அறக்கட்டளை நிறுவனர் மா.பொ.சி.மாதவி பாஸ்கரன், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக்கழக முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், சேலம் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் ஏ.ரவீந்திரன், மராட்டிய மாநில தமிழ்சங்க பொதுச்செயலாளர் ஜெ.ராஜஇளங்கோ, புனே சவுத் இந்தியன் அசோசியேஷன் தலைவர் ஜெய்சங்கர், ஜெய்சிங் உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.

இதைத்தொடர்ந்து பாராட்டுக்கு நன்றி தெரிவித்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

நான் தெலுங்கானா கவர்னராக பொறுப்பேற்ற பின்பு அங்கு தினமும் தமிழ் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் காலடி எடுத்து வைக்கும்போது தெலுங்கானா கவர்னர் வந்துள்ளார் என்று சொல்வதன் மூலம் தமிழகத்தில் தெலுங்கு ஒலிக்க தொடங்கி இருக்கிறது.

ஒரு பெண் அரசியலுக்கு வருவது என்பது எவ்வளவு கடினம் என்பதை நான் நன்கு உணர்ந்தவள். நாம் உழைப்பதில் என்றும் சளைத்தவர்கள் அல்ல. அதனால் தான் பலர் நம்மை பார்த்து பயப்படுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். உழைத்தால் உயர்ந்த இடத்தை அடைய முடியும். தோல்விகள் தான் வெற்றியின் படிக்கட்டுகள் என்பதும் நமக்கு தெரியும். தோல்விகள் எனும் வலிகளை வலிமையாக மாற்றும் சக்தியும் நமக்கு உள்ளது.

நாம் எந்த உயரத்துக்கு சென்றாலும் கடந்து வந்த பாதையை மறக்கக்கூடாது. தமிழிசைக்கு ஓய்வு என்பது கிடையாது. நான், தெலுங்கானா கவர்னராக பொறுப்பேற்ற பின்பு அன்புள்ளம் கொண்ட பவனாக ராஜ்பவன் மாறி உள்ளது.

தொடர்ந்து நல்லதை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் இறைவன் மூலம் பதவிகள் நம்மை தேடி வரும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழிசை சவுந்தரராஜன், அவரது கணவர் டாக்டர் சவுந்தரராஜன் ஆகியோருக்கு ஆளுயர மாலை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இதேபோன்று விழாவில் கலந்து கொண்டவர்களும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பொன்னாடை, மலர்க்கொத்து, நினைவுப்பரிசுகளை வழங்கினர்.

தொழில் அதிபர் வைகுண்டராஜன், சென்னை வாழ் நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து, பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், துணைத்தலைவர்கள் எம்.ஏ.திரவியம், கரு.சி.சின்னத்துரை நாடார், செயலாளர்கள் கே.எம்.செல்லத்துரை, எஸ்.செல்லத்துரை, தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன் உள்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.

முடிவில், தமிழ் சான்றோர் பேரவை ஒருங்கிணைப்பாளர் கரு.நாகராஜன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com