

திருவட்டார்:
கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திற்பரப்பு
குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திற்பரப்பு அருவியில் தற்போது மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. கோடை விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று திற்பரப்புக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
படகு சவாரி
அருவியிலும், அருகில் உள்ள நீச்சல் குளத்திலும் உற்சாகமாக குளித்தனர். பின்னர் சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அருவியின் மேல் பகுதியில் உள்ள திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி செய்து குதூகலத்துடன் வீடு திரும்பினர். திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் தொட்டிப்பாலத்தில் நேற்று காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தொட்டிப்பாலத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை நடந்து சென்று இயற்கை அழகை ரசித்தனர். தொடர்ந்து பாலத்தில் இருந்து கீழிறங்கி பரளியாற்றில் குளித்து மகிழ்ந்தனர்.