திருவள்ளுவருக்கு காவி பூசி களங்கப்படுத்துவதா? கவர்னருக்கு அமைச்சர் வன்னி அரசு கண்டனம்

கவர்னர் அர்லேகர் தமது ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, அம்பேத்கர் வகுத்தளித்த அரசமைப்பு சட்டத்தை நிலைநிறுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று வன்னி அரசு கூறியுள்ளார்.
தமிழ்நாடு கவர்னர்
Published on

தமிழ்நாடு கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளுவர் புகைப்படத்திற்கு கவர்னர் அர்லேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதற்காக வைக்கப்பட்டு இருந்த திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை அணிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கவர்னரின் செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், விசிக நிர்வாகியும் தமிழக சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வன்னி அரசு பதிவு

இது தொடர்பாக வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி வரிசையில் இப்போது பொறுப்பு ஆளுநராக இருக்கும் ராஜேந்திர அர்லேகர் அவர்களும் அய்யன் திருவள்ளுவருக்கு 'காவி' பூசி, அவரை களங்கப்படுத்தும் வேலையை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடும், தமிழர்களும் என்றும் காவிகளையும், அதனை திணிக்க முயலும் சனாதனிகளையும் துளியும் ஏற்காது புறந்தள்ளுவார்கள் என்பதற்கு சட்டமன்ற தேர்தல் முடிவுகளே சாட்சியாக உள்ளன. நமது பொறுப்பு ஆளுநர் அர்லேகர், இங்கு திருவள்ளுவருக்கு காவி பூசுவதற்கு முன்னரே, அவர் ஆளுநராக இருக்கும் கேரள மாநிலத்தில் அரசு விழாக்களில் ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் 'பாரத மாதா' படத்தை தொடர்ந்து திணித்து வருகிறார். இதனாலேயே முந்தைய இடதுசாரி அரசின் அமைச்சர்கள், ஆளுநரின் நிகழ்ச்சிகளை புறக்கணித்த நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

விஜய் வலியுறுத்தியபடி

தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்கு தள்ளுவது, திருவள்ளுவருக்கு காவி பூசுவது போன்ற ஆளுநரின் தமிழர் விரோத செயல்கள் கண்டிக்கத்தக்கது. தமிழர் விரோத செயல் மட்டுமல்ல அரசமைப்புச் சட்டத்துக்கும் விரோதமானதாகும். தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்திய பிரதமரிடம் வலியுறுத்தியபடி, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் (ஆளுநர் அலுவலகம் உள்பட) தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதன்மை இடத்தை உறுதி செய்ய வேண்டும். ஆளுநர் அர்லேகர் தமது ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசமைப்பு சட்டத்தை நிலைநிறுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com