

ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 50). ஆட்டோ டிரைவர். நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் வடபுதுபட்டு பகுதியில் இருந்து ஆம்பூர் நோக்கி ஆட்டோவில் பாலகிருஷ்ணன் வந்து கொண்டிருந்தார்.
அப்போது கன்னிகாபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து சென்று பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.