பையில் வைத்து சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை - போலீசார் விசாரணை

தஞ்சாவூரில் பச்சிளம் பெண் குழந்தை துணிப்பையில் வைத்து சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள மணிக்கிரான் விடுதி மேயா குளக்கரை அருகே நேற்று காலை குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அந்த வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தபோது ஒரு பச்சிளம் பெண் குழந்தை துணிப்பையில் வைத்து சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த கிராம மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற திருவோணம் போலீசார், பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு திருவோணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த திருவோணம் வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி தலைமையிலான மருத்துவர்கள் மீட்கப்பட்ட பெண் பச்சிளம் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். 2 கிலோ எடையுடன் அந்த குழந்தை நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சாலையோரம் கிடந்து மீட்கப்பட்ட அந்த குழந்தையின் தாய் யார்? எதற்காக அந்த குழந்தையை சாலையோரம் போட்டு விட்டு சென்றார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் திருவோணம் போலீசார் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com