மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் மூங்கில் யானை சிலைகள்

மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மூங்கிலால் வடிவமைக்கப்பட்ட யானை சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் மூங்கில் யானை சிலைகள்
Published on

மாமல்லபுரம், 

சென்னையில் நடைபெற்று வரும் ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு விருந்தினர்கள் பல்வேறு குழுக்களாக மாமல்லபுரம் வருகின்றனர். அதேபோல் வடமாநில சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வருகின்றனர்.

இந்த நிலையில் கடற்கரை கோவில் வளாகத்தில் மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு சிற்பத்தில் உள்ள யானை கற்சிற்பத்தை நினைவு படுத்தும் வகையில் கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியில் மூங்கில்களால் தயாரித்து, வடிவமைக்கப்பட்ட 15 யானை சிலைகள் லாரி மூலம் கேரளாவில் இருந்து மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டது.

அந்த யானை சிலைகள் தற்போது கடற்கரை கோவில் புல்வெளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. குட்டி யானை முதல் பெரிய யானை வரை நிஜ யானைகள் கூட்டம், கூட்டமாக புல்வெளியில் மேய்வது போன்று தத்ரூபமாக ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ளது.

கடற்கரை கோவில் வளாகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர் அசல் யானை போல் உள்ள மூங்கில் யானை சிலைகளின் அருகில் சென்று அதன் அழகை ரசித்து பார்த்து அவற்றின் முன்பு நின்று செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

வெளிநாட்டு பயணிகள் பலர் அசல் யானையோ என்று அதன் அருகில் வந்து பார்த்து ஏமாந்து சென்றதையும் காண முடிந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com