தேனி பகுதியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக மீண்டும் வைக்கப்பட்ட பேனர்கள்

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக தேனியில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக மீண்டும் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
தேனி பகுதியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக மீண்டும் வைக்கப்பட்ட பேனர்கள்
Published on

தேனி,

உயிருடன் இருப்பவர்களின் படத்துடன் பேனர்கள் வைக்க தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக புகைப்படத்துடன் வைக்கப்பட்ட பேனர்கள் நேற்று முன்தினம் அகற்றப்பட்டன.

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் புகைப்படங்களுடன் அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் அகற்ற போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அந்தவகையில், மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன.

இது ஒருபுறம் இருக்க எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் நேற்று மீண்டும் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டன. இந்த பேனர்களில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மறைந்த தலைவர்களான பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன.

உயிருடன் இருப்பவர்களின் புகைப்படத்துக்கு பதில் பெயர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளன.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகளின் பெயர்கள் மட்டும் இடம் பெற்று உள்ளன. பழனிசெட்டிபட்டி பகுதியில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. சிலர் அவசர, அவசரமாக பேனர்கள் வைத்துள்ளதால், அவற்றில் எழுத்து பிழைகள் காணப்படுகிறது.

பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களால் மின்விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com