

சென்னை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை, வேறு கட்சிக்கு மாறுமாறு கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும், இதற்காக பேரம் பேசியதாகவும் யூடியூபர் IPDS திருநாவுக்கரசு மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் யூடியூபர் திருநாவுக்கரசை இன்று கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகின. மேலும் கரூரைச் சேர்ந்த 2 பேர் தான் தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியதாக திருநாவுக்கரசு போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலின்படி, கரூர் விரைந்த சென்னை போலீசார் கரூரில் சக்தி மெஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்த திமுக பிரமுகர்களான கார்த்திக், ரமேஷை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் ஆவர். மேலும் செந்தில் பாலாஜியின் கரூர் கம்பெனியை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதில் கார்த்திக் திமுக விளையாட்டு அணி துணை செயலாளராக உள்ளார். கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர்கள் 2 பேரின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடந்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் நேற்று கூறிய நிலையில், இன்று செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3 எம்எல்ஏக்களுக்கு குறி வைத்து பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு எம்எல்ஏ-க்கும் ரூ.15 கோடி பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக யூடியூபர் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன், கிருஷ்ணன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.