

கன்னியாகுமரி,
தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டார். சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி தேர்தல் பிரசாரத்தில் பெரிய அளவில் அண்ணாமலை தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இந்தநிலையில், கடந்த மாதம் பா.ஜனதாவில் இருந்து அண்ணாமலை விலகினார்.
தொடர்ந்து, அவர் ஏற்கனவே நடத்தி வந்த 'வீ த லீடர்ஸ்' என்ற அமைப்பை அரசியல் களத்தில் இறக்கினார். அந்த அமைப்பில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையும் நடத்தினார். முதல் நாளில் சுமார் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். தொடர்ந்து முகாம் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.
இதற்கிடையே, பொள்ளாச்சியில் கடந்த 12-ந்தேதி அண்ணாமலை நடத்திய மாநாட்டில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் 2-வது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்க அண்ணாமலை திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான பணிகளில் அவர் முழு வீச்சில் இறங்கியுள்ளார்.
இந்த நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடற்கரை தூய்மைப்படுத்தும் இயக்கத்தை அண்ணாமலை தொடங்கி வைக்க உள்ளார். மாநிலம் தழுவிய இந்த முன்னெடுப்பை வரும் ஆகஸ்ட் 2-ந்தேதி கன்னியாகுமரியில் அண்ணாமலை தொடங்கி வைக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரியை தொடர்ந்து நெல்லை மாவட்டம் உவரி, மணப்பாடு மற்றும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆகிய கடற்கரைகளிலும் இந்த தூய்மைப்படுத்தும் இயக்கத்தை அண்ணாமலை தொடங்கி வைக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.