போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளிப்பு மீட்க முயன்ற அண்ணன், பெண் ஏட்டு காயம்

போலீஸ் நிலையம் முன் பெண் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை மீட்க முயன்ற அண்ணன், பெண் போலீஸ் ஏட்டு காயமடைந்தனர்.
போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளிப்பு மீட்க முயன்ற அண்ணன், பெண் ஏட்டு காயம்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் அகிலா(வயது 27). இவரது கணவர் பாரதி. இந்த தம்பதிக்கு பரத்குமார் (9) என்ற மகனும், யாழினி (5) என்ற மகளும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து தனது தாயார் ராணி வீட்டில் அகிலா வசித்து வருகிறார்.

இந்நிலையில் வயலூரில் வசிக்கும் அமரதீபன்(29) என்பவருடன், அகிலாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் சென்றனர். இதுகுறித்து ராணி கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த மே மாதம் திருப்பூரில் தங்கியிருந்த அமரதீபன், அகிலா ஆகியோரிடம் விசாரித்தனர். பின்னர் சமரசம் செய்து 2 பேரையும் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அமரதீபனிடம் உள்ள 8 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை பெற்றுத்தருமாறு போலீசில் ராணி புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அமரதீபன் மற்றும் அகிலாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அமரதீபனுக்கு ஆதரவாக போலீசார் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அகிலா, போலீஸ் நிலையம் முன் ஸ்கூட்டரில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. போலீசார் அகிலாவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அகிலாவின் உடலில் தீப்பற்றி எரிந்தபோது, அவரை மீட்க முயன்ற அகிலாவின் அண்ணன் அசோக்ராஜ், பெண் ஏட்டு ரீத்தல் ஆகியோரின் கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com