

சேரன்மகாதேவி,
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே, சிறையில் இருக்கும் ஏ-பிளஸ் பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியின் பிறந்த நாளை கொண்டாட அரிவாளுடன் கூடிய 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் நவீன். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், காவல்துறையின் ஏ-பிளஸ் பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, சேரன்மகாதேவியில் இருந்து கூனியூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் நேற்று இரவு 8.50 மணியளவில் ஒரு கும்பல் ரகசியமாக கூடியது.
சிறையில் இருக்கும் ரவுடி நவீனின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடவும், அதேசமயம் அங்கு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஏதோ குற்ற செயலில் ஈடுபடவும் அவர்கள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவர்களில் 5 பேர் ஏற்கனவே சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவர்.
இதுகுறித்து சேரன்மகாதேவி காவல் நிலைய ரோந்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்தவுடன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காவல்துறையினர் வருவதை கண்டதும் பாலத்தின் கீழ் கூடியிருந்த ரவுடி கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடியது.
இருப்பினும், உஷாரான போலீசார் துரிதமாக செயல்பட்டு, தப்பியோட முயன்ற கும்பலை வளைத்து பிடித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அவர்கள் பயன்படுத்திய 12 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், போலீசாரை கண்டு தப்பியோடிய மற்ற நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.