

சென்னை,
சாதியப் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தை பாஜகவால் ஒருபோதும் ஒடுக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தீண்டாமை மற்றும் சாதியப் பாகுபாட்டுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காகவே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடர்பான சம்பவத்தில், ராகுல் காந்தி மீது FIR பதிவு செய்திருப்பது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் ஆழமாக வேரூன்றியுள்ள மனுவாத சிந்தனையை வெளிப்படுத்துகிறது.
பா.ஜ.க.வின் செய்தி தெளிவாக உள்ளது: சாதியப் பாகுபாட்டைக் கேள்வி கேட்பவர்கள் குறிவைக்கப்படுவார்கள்; அதைத் தொடர்ந்து பாதுகாப்பவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
தீண்டாமைக்கும் சமூகப் பாகுபாட்டிற்கும் எதிராக காங்கிரஸ் எப்போதும் போராடி வந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 17-வது பிரிவின் மூலம் தீண்டாமையை ஒழித்ததும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க SC-ST (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தை கொண்டுவந்ததும் சமூக நீதிக்கான போராட்டத்தில் காங்கிரசின் வரலாற்றுச் சாதனைகள்.
ஆனால், தீண்டாமையை ஒழிக்க ஆர்.எஸ்.எஸ். நடத்திய இயக்கம் எங்கே? சாதிய ஏற்றத்தாழ்வையும் மனுவாத சமூக அமைப்பையும் தகர்க்க பா.ஜ.க. செய்த வரலாற்றுச் சாதனை என்ன? சமூகப் பாகுபாட்டை எதிர்கொள்வதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கி, அநீதிக்கு எதிராக எழுப்பப்படும் குரலையே குற்றமாக்க பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது.
இது வெறும் அரசியல் ஆணவம் அல்ல. சமத்துவம், கண்ணியம் மற்றும் சமூக நீதியை வலியுறுத்திய அம்பேத்கரின் அரசியலமைப்புச் சிந்தனையின் மீதான நேரடியான தாக்குதல். FIR-கள் மூலம் ராகுல் காந்தியின் குரலை ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஒடுக்க முயற்சி செய்யலாம். ஆனால், சாதியப் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தை அவர்களால் ஒருபோதும் ஒடுக்க முடியாது.
மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் ஒட்டுமொத்த காங்கிரஸ் பேரியக்கம் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உறுதியாக நிற்கும். தீண்டாமையை எதிர்த்துப் போராடும். மனுவாத சிந்தனையைப் பாதுகாக்கும் ஒவ்வொரு முயற்சியையும் எதிர்த்து தொடர்ந்து போராடும்.
அரசியலமைப்பைக் காப்போம். சமூக நீதியைக் காப்போம். சாதியப் பாகுபாட்டை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.