நாடாளுமன்றத்தை வெறும் சடங்காக மாற்றும் பாஜக அரசு: மாணிக்கம் தாகூர் கண்டனம்

பாஜக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மாணிக்கம் தாகூர்
Published on

சென்னை,

நாடாளுமன்றத்தை வெறும் சடங்காக மாற்றி, மாணவர்களின் எதிர்காலத்தையும் ஜனநாயக மரபுகளையும் சீர்குலைக்கும் பாஜக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கூட்டத்தொடர் ஒத்திவைப்பு

கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடர், இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் அவை நடவடிக்கைகளுக்கோ, மாணவர்கள் போராட்டம் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்த விவாதங்களுக்கோ வராமல் புறக்கணித்துவிட்டு, கடைசி நாளில் மட்டும் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் வெறும் 'Guest Appearance' தந்துள்ளது ஜனநாயகத்தின் மீதான அவர்களின் அலட்சியத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

மோடி-அமித் ஷா புறக்கணிப்பு

நாடாளுமன்றத்தை முன்னின்று வழிநடத்த வேண்டிய பிரதமர் மோடியும் பதில் சொல்ல வேண்டிய அமீத் ஷாவும், ஒட்டுமொத்த கூட்டத்தொடர் முழுவதும் அவைப் பணிகளில் பங்கேற்காமல் புறக்கணித்த ஒரு நிகழ்வை, வரலாற்று ஆய்வாளர்களாலேயே தேடிப் பிடிக்க முடியாமல் திணறும் அளவுக்கு ஒரு மோசமான முன்னுதாரணம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை வெறும் சடங்காக மாற்றி, மாணவர்களின் எதிர்காலத்தையும் ஜனநாயக மரபுகளையும் சீர்குலைக்கும் பாஜக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com