நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை விரட்டியடிப்போம் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை விரட்டியடிப்போம் எனவும் புதுக்கோட்டையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை விரட்டியடிப்போம் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Published on

புதுக்கோட்டை,

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தடையை நீக்கி சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தமிழக அரசின் வக்கீல்கள் மூலம் வாதாடி பெற்று தந்தமைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஜல்லிக்கட்டு பேரவைகளின் சாபில் புதுக்கோட்டையில் நேற்று மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஜல்லிக்கட்டு பேரவை நிறுவன தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

அரசியலில் ஜல்லிக்கட்டு

கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தில் பாசிச கட்சி அரசியலில் ஜல்லிக்கட்டை புதிதாக தொடங்கியிருக்கிறார்கள். அந்த ஆட்டத்தை கூட அவர்களால் நேர்மையாக ஆடமுடியவில்லை. பின்வாசல் வழியாக வருகின்றனர்.

ஜல்லிக்கட்டை பொறுத்தவரை வாடிவாசல் வழியாக தான் காளைகள் வரும். ஆனால் பாசிச கட்சி புறவாசல் வழியாக தான் வருகின்றனர். அதனை தமிழக மக்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டார்கள்.

மத்திய அரசின் அடக்குமுறை

மத்திய அரசின் அடக்குமுறையை கண்டு தி.மு.க. என்றும் பயந்தது கிடையாது. எத்தனை மோடி, அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழகத்தை ஒன்றும் செய்ய முடியாது. பா.ஜ.க.வின் தொண்டர்படை வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ. தான். 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு அமலாக்கத்துறை 121 அரசியல் தலைவர்களை விசாரித்துள்ளது.

இதில் 115 பேர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள். இதேபோல தான் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 18 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். மோடியிடம் நெருக்கமாக உள்ள அதானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தவில்லை.

நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம், இ.டி.க்கும் பயப்படமாட்டோம். முதல்-அமைச்சர் சொல்கிற இடத்தில் கவானா கையெழுத்திட வேண்டும், கவர்னர் மத்திய அரசின் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அவ்வளவு தான். 21 கோப்புகளில் கவர்னர் கையெழுத்திடாமல் உள்ளார்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில்...

ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற 2017-ம் ஆண்டுக்கு பின் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை ஓட, ஓட விரட்டினீர்கள்.

ஜல்லிக்கட்டு நன்றி அறிவிப்பு கூட்ட நடைபெறுகிற இந்நேரத்தில் அடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாசிச கூட்டணியை விரட்டியடிக்க வேண்டும். 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டியடிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன், மூர்த்தி, பெரியகருப்பன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு செங்கோல், ஜல்லிக்கட்டு காளையை மாடுபிடி வீரர் ஒருவர் அடக்குவது போன்ற சிலையும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com