

காரைக்கால்,
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள சர்வைட் ஆங்கிலப் பள்ளியில் ராஜேந்திரன்-மாலதி தம்பதியின் மகன் பாலமணிகண்டன் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இ்ந்த நிலையில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவன் பாலமணிகண்டன் கொலை செய்யப்பட்டான்.
வகுப்பில் அவன் முதல் மாணவனாக வந்ததை பொறுக்காத, காரைக்கால் வேட்டைக்காரன் வீதியை சேர்ந்த சக மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியா தான் காவலாளி மூலம் அந்த குளிர்பானத்தை வழங்கியது தெரியவந்தது.
இதையடுத்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாயராணி விக்டோரியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என பல்வேறு தரப்பினர் மருத்துவமனை மீது குற்றச்சாட்டு எழுப்பினர்.
இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து புதுச்சேரி மாநில முதல்-மந்திரி ரங்கசாமி அரசு மருத்துவமனையில் மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.